Sunday, March 11, 2018

போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பயங்கரம் காட்டுத்தீயில் சிக்கி 8 பெண்கள் பலி: ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை

 

 போடிஅருகே குரங்கணி மலைப்பகுதியில் பயங்கரம் காட்டுத்தீயில் சிக்கி 8 பெண்கள் பலி: ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை


போடி: சென்னை,  ஈரோடு, திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், சுற்றுலாப்பயணிகள், குழந்தைகள் என 36 பேர் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி கொண்டனர். இவர்களில் குழந்தைகள், பெண்கள் உள்பட 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காட்டுக்குள் சிக்கியவர்களில் 8 பெண்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.தேனியில் இருந்து மூணாறு வழித்தட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வடக்குமலை, அகமலை, மரக்காமலை, வடமலையாச்சியம்மன் கோயில், ஊத்தாம்பாறை, குடமுருட்டி, பிச்சாங்கரை, அடகுபாறை, காரிப்பட்டி, கொட்டக்குடி, குரங்கணி, போடிமெட்டு, இலங்காவரிசை, உரல்மெத்து, முட்டம், மேல்முட்டம், கீழ்முட்டம், சென்ட்ரல், அத்தியூத்து, சின்னமுடக்கு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இம்மலைப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள், தேக்கு, சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. தமிழக, கேரளாவை இணைக்கும் வகையில் உள்ள இந்த வழித்தட பகுதிகளில் ஆண்டிற்கு 8 மாதங்கள் வரை மழை பெய்வதால் தட்பவெப்ப நிலை ரம்யமாக இருக்கும். அதேநேரத்தில் கோடைக்காலம் துவங்கி விட்டால் மலைப்பகுதியில் மரங்கள், புற்கள் காய்ந்து காட்டுத்தீ பற்றி எரிய துவங்கி விடுகிறது. தற்போது கோடை வெயில் காரணமாக, போடிமெட்டு அருகே அகமலை, மராக்காமலை, குரங்கணி பகுதிகளில் உள்ள காடுகளில் கடந்த 20 நாட்களாக இரவு, பகலாக காட்டுத்தீ பரவி வந்தது. வனத்துறையினர் அவ்வப்போது அணைப்பதும், மீண்டும் காட்டுத்தீ பற்றி எரிவதுமாக இருக்கிறது.

இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி சென்னை,  ஈரோடு, திருப்பூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள், மலையேற்றப் பயிற்சியாளர்கள், தங்கள் குடும்பத்துடன் 36 பேர் போடி அருகேயுள்ள குரங்கணிக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர்.
இவர்கள் நேற்று காலை கேரள மாநிலம், மூணாறு சென்றனர். மாலையில் அங்கிருந்து கொழுக்குமலை வழியாக குரங்கணிக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக கீழிறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வழியில், திடீரென பயங்கர காட்டுத்தீ பற்றியது. காட்டுத்தீக்குள் சிக்கிக் கொண்ட இவர்கள், அதில் இருந்து தப்ப வழி தெரியாமல் வனத்திற்குள் அங்குமிங்கும் சிதறி ஓடினர்.

காட்டுத்தீயில் இவர்கள் சிக்கிக் கொண்ட தகவலை அறிந்த கொழுக்குமலையை சேர்ந்த பெண் ஒருவர் குரங்கணி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து குரங்கணி போலீசார், போடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் காற்று பலமாக வீசியதால் வனத்திற்குள் தீ வேகமாக பரவியது. தீவிபத்து நடந்த பகுதி, மலையடிவாரத்தில் இருந்து 9 கிமீ தூரத்தில் இருப்பதாலும், சாலை வசதி இல்லாததாலும் உடனடியாக
வாகனங்களில் சென்று மீட்க முடியவில்லை. காட்டுக்குள் பற்றி எரிந்த தீயின் ஜூவாலைகள், அங்கிருந்த கோரைப்புற்களில் பற்றி விறுவிறுவென பரவியது. இதனால் அதில் சிக்கிக் கொண்டவர்களால் அங்கிருந்து தப்பி வரமுடியாத சூழ்நிைல ஏற்பட்டது. தகவலறிந்ததும் தேனி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதிகளில் இருந்து ஏராளமான தீயணைப்பு வாகனங்கள், 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மலையடிவாரமான
குரங்கணிக்கு விரைந்தன. அருகிலுள்ள மலைக்கிராம மக்களும் கொழுக்குமலை பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தேனி மாவட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். கோவை, சூலூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், எஸ்பி பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட தீயணைப்பு படை அலுவலர் மணிகண்டன் ஆகியோரும் விரைந்து தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை முடுக்கி விட்டனர்.
 காட்டுத்தீயில் சிக்கிய திருப்பூர் பூம்புகார் நகரை சேர்ந்த அங்கமுத்து மகன் ராஜசேகர் (23), திருப்பூரை சேர்ந்த சரவணன் மகள் பாவனா (24), ஈரோடு செந்தில்குமார் மகள் நேகா (9), திருப்பூரை சேர்ந்த சரவணன் மகள் சாதனா (11), சென்னை தனபால் மகள் மோனிஷா (30), சென்னை வேளச்சேரி பியூஷ் மனைவி பூஜா (27), சென்னை குரோம்பேட்டை கல்யாணராமன் மகள் சகானா (20), சென்னை ஐடி ஊழியர் ஷ்ரதா உட்பட 10 பேரை  டோலி மூலம் காயங்களுடன் மீட்டனர்.

அவர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயில் சிக்கிய அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீளமுடியாத நிலையில் உள்ளனர். கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தீயில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் அதிகாலை 12 மணியளவில் சென்னையைச் சேர்ந்த அனுவித்யா (25) என்பவரை உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் வனத்துறையினர் மற்றும் மக்கள் மீட்டுள்ளனர். அவரையும் சேர்த்து 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.இன்னும் எஞ்சிய 25 பேரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் 8 பெண்கள் உடல் கருகிய நிலையில் இறந்து கிடப்பதாக மீட்புப்பணிக்கு சென்று திரும்பிய ராணுவ வீரர் பாக்கியராஜ் நள்ளிரவில் நிருபர்களிடம் தெரிவித்தார். தீயணைப்பு துறை வீரர்கள் சில சடலங்களை பார்த்ததாக தெரிவித்தனர்.

காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிவதால் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை தீயணைப்புத்துறை துணை இயக்குநர் சரவணக்குமார் தலைமையில் 25 பேர் கொண்ட வீரர்கள் இரவு 9 மணியளவில் குரங்கணிக்கு புறப்பட்டுச்சென்றனர்.இந்நிலையில், 10 கமாண்டோக்கள் கொண்ட ராணுவ மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் போடி குரங்கணி மலைப் பகுதிக்குச் சென்று தீப்பற்றி எரியும் பகுதியைச் சுற்றி பார்வையிட்டு நிலைமையைக் கண்காணித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவில் 12 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்துக்குச் சென்றனர். அதிகாலையில் மீட்புப்பணியில் மீண்டும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவக்குழுக்கள் தயார்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சுகதாரத்துறை சார்பில் அனைத்து மருத்துவ உதவி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 8 பேர் மீட்கப்பட்டு, போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிக்கியுள்ளவர்களின் மருத்துவ உதவிக்காக 13 ஆம்புலன்சுகள், மருத்துவக் குழுக்கள், தேனி அரசு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் மேற்பார்வையில்  போடி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் மீட்கப்பட்டு கொண்டு வரும் பெண்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். மதுரை மருத்துவக்கல்லூரி தீக்காய சிகிச்சைத்துறையை சேர்ந்த மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது. அங்கிருந்து 6 மருத்துவர்கள் குரங்கணி விரைந்துள்ளனர். சிறப்பு மருத்துவர்கள் 24 மணி நேரமும்  அங்கே இருந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குரங்கணி மலையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் கொண்டு வரப்படும்பட்சத்தில், அங்கேயும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

நிர்மலா சீதாராமன் உடனடி நடவடிக்கை: காட்டுத்தீ குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட விமானப்படைக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் உடனுக்குடன் தகவல்களை பதிவிட்டார். மாலை 6.30 மணி அளவில் அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘குரங்கணி மலை காட்டுத்தீயில் சிக்கிய 20 மாணவர்களை மீட்க, தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று மீட்பு பணியில் ஈடுபட விமானப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானப்படையின் தென் மண்டல அதிகாரி, தேனி கலெக்டரை தொடர்பு கொண்டு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார்’ என ஆங்கிலத்தில் பதிவிட்டார்.

 பின்னர், தமிழகத்தை சேர்ந்தவரான நிர்மலா சீதாராமன் தனது அடுத்தடுத்த தகவல்களை தமிழிலேயே பதிவிட்டார். ‘மாணவர்களை மீட்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும்’ என மாலை 6.45 மணி அளவிலும், பின்னர் ‘தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்’ என சுமார் 7 மணி அளவில் 2வது பதிவையும் பதிவிட்டார். அதைத்தொடர்ந்து, விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியிலும், தீயணைப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மீட்பு பணியில் மத்திய பாதுகாப்பு படை: காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவிகளை மீட்க ஹெலிகாப்டர்களை ஈடுபடுத்துமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவையடுத்து கோவை மாவட்டம், சூலூரில் இருந்து மாணவிகளை மீட்க 2 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளது. மீட்பு பணியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இருட்டில் முடியாது: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘இதுவரை 10 மாணவிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சூலூர் விமானப்படை மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் அங்கு விரைந்துள்ளன. இரவு நேரத்தில் ஹெலிகாப்டரில் சென்று மாணவிகளை மீட்பதில் சிக்கல் உள்ளது. தற்போது ஹெலிகாப்டர்கள், தீ பரவிய இடங்களை ஆய்வு செய்யும். நாளை (இன்று) அதிகாலையில் மாணவிகளை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடும். தேனி மாவட்ட கலெக்டரிடம் ேபானில் பேசியுள்ளேன். அவர் மீட்பு நடவடிக்கையில் முழுவீச்சில் தீயணைப்பு, வனத்துறை, காவல்துறை ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். அவருக்கு முழு ஒத்துழைப்பு நாங்கள் வழங்குவோம்,’’’ என்றார்.

‘மைனா’ ஷூட்டிங் நடந்த மலைப்பகுதி: போடியில் இருந்து 12 கிமீ தொலைவில் குரங்கணி மலைப்பகுதி உள்ளது. நேற்று தீவிபத்து நடந்த கொழுக்குமலை மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ளது. கொழுக்குமலை சுற்றுலாத்தலம் மட்டுமின்றி மலையேற்றப் பயிற்சி பெறுவதற்கும் சிறந்த இடமாக  உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து  சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் மலையேற்ற பயிற்சிக்கு வருகின்றனர். பசுமைப்பள்ளத்தாக்கான இப்பகுதி இயற்கை வளம் கொட்டிக் கிடக்கும் இடமாகும். ‘மைனா’ திரைப்படத்தின் பெரும்பகுதி இப்பகுதியில்தான் படமாக்கப்பட்டது. அழகர்சாமியின் குதிரை, கும்கி படங்களும் இங்கு எடுக்கப்பட்டுள்ளன.

இயற்ைக அழகு காரணமாக இப்பகுதியில் சினிமா ஷூட்டிங் அதிகமாக நடக்கிறது. சுற்றுலாப்பயணிகளும் இங்கு அதிக அளவில் குவிகின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். குரங்கணி மலையானது மலையேற்றம் மற்றும் இயற்கை நடைப்பயிற்சிக்கு ஏற்றது. குரங்கணி மலையின் மைய கிராமத்தில் இருந்து 12 கிமீ நடக்கும் தொலைவில் டாப் ஸ்டேஷன் உள்ளது. கேரளாவில் உள்ள மூணாறுக்கு இங்கிருந்து, அடர்ந்த வனப்பகுதிகளையும், புல்வெளிகளையும் கடந்து நடந்தே செல்ல முடியும்.

‘மாற்று பாதையில் வந்ததால் என் மகள் தப்பினார்’: மலையேற்றம் சென்ற மோனிஷாவின் தந்தை தனபால் கூறியதாவது:என்னுடைய மகள் மோனிஷா உள்பட 24 பேர் சென்னையில் இருந்து 3 நாட்களுக்குமுன் மலையேற்றத்துக்காக போடி சென்றனர். அங்கு மலையேற்றத்தில் பங்கேற்றுவிட்டு இன்று(நேற்று) இரவு கிளம்பி, சென்னை வர திட்டமிட்டிருந்தனர். என்னுடைய மகள் மலையில் இருந்து இறங்கும்போது ஒருபகுதியில் புகை வருவதை பார்த்துள்ளனர். அப்போது அவர்களுடன் வந்த வழிகாட்டி காட்டுத்தீ எரிவதால் வேறு பாதையில் அழைத்துச் செல்வதாக கூறி அழைத்து வந்துள்ளார். மோனிஷாவுடன் சேர்ந்து மொத்தம் 5 பேர் பத்திரமாக, உள்ளதாக எங்களுக்கு போனில் அவர் தெரிவித்தார். அங்குள்ள எனது உறவினர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

வனத்துறை அனுமதி இல்லை: தேனி மாவட்ட முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் டாக்டர் பசவராஜ் கூறுகையில், `மாணவிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள். தற்போது 7 மாணவிகள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை விரைவில் மீட்பதற்கான பணிகளில் தீயணைப்பு, வனத்துறை, போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாணவிகள் வனத்துறை அனுமதியின்றி மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்கள் கேரளா வழியாக குரங்கணிக்கு இறங்கி வரும் போது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இதுவே அசம்பாவிதம் நடக்க முக்கிய காரணம்,’’ என்றார்.

மீட்புப்பணி ஹெலிகாப்டர்கள்: தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் காட்டு தீயில் சிக்கிய மாணவர்களை மீட்க கோவை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து எம்.ஐ. 17 ரகத்தை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிக்கு சென்றுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களில் தீ பற்றாமல் தடுக்க கூடிய கருவிகள், பாதுகாப்பு கவசங்கள், உடைகள், மற்றும் அவசரகால சிகிச்சை மருந்துகள், மற்றும் தீயை அணைக்ககூடிய தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளது.

சிக்கியவர்கள் விபரம்: காட்டுத்தீயில் சிக்கியவர்கள் விபரம்:திவ்யா, ரேணு, பார்கவி, சிவசங்கரி, விஜயலட்சுமி, இலக்கியா சந்திரன், சகானா, அகிலா, சுவேதா, ஜெய, நிவ்யாபிரகரசதி, நிவேதா, அனுவித்யா, ஹேமலதா, புனிதா, சாய் வாசுமதி, சுபா, தேவி, மினிஜார்ஜ், நிஷா ஆகிய 20 பேர் காட்டுத்தீயில் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வனத்துறை அதிகாரி வழிகாட்டலில் தவறு?: கொழுக்குமலையில் தனியார் சிலருக்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதில் தங்கி ஓய்வெடுக்க அறைகள் உள்ளன. நேற்று அப்படி வந்தவர்கள் தான் விபத்தில் சிக்கியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரியின் குடும்பத்தினரின் வழிகாட்டுதலில்தான் இவர்கள் குரங்கணி வந்ததாக கூறப்படுகிறது. அவரது அறிவுறுத்தலின் பேரில் மாலை 3 மணிக்கு அவர்கள் மலையை விட்டு இறங்கும் போது விபத்தில் சிக்கினர். குழந்தைகள், சிறுமிகள் இருந்ததால் அவர்கள் தப்பிக்க சிரமம் ஏற்பட்டது.

‘சம்திங்’ சிக்கல்: கோடை காலம் என்றால் தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம், போடி பகுதிகளில் மலைகளில் தீ ஏற்படுவது வழக்கம். போதுமான வனக்காவலர்கள் இல்லாததாலும், தீத்தடுப்பு கருவிகள் இல்லாததாலும், தீயில் ஏராளமான மரங்கள் அழிந்து வருகின்றன. வனத்தில் தீப்பிடித்தால், அருகில் உள்ள மரங்களைக் கொண்டு அவற்றை அணைக்கும் வகையில் தான் வனத்துறையினர் செயல்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன் வனத்துறையினரின் அனுமதி பெறுவதற்கு ‘சம்திங்’ கொடுத்து விட்டு பலர், மலையேறி வருவதால் இது போன்ற விபத்து நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

துணைமுதல்வர் தொகுதியில் விபத்து: போடியைச் சேர்ந்த திருமுருகன் கூறுகையில், `‘துணைமுதல்வர் ஓபிஎஸ்சின் போடி தொகுதிக்குள்தான் இந்த குரங்கணி வருகிறது. கடந்த ஒரு வாரமாக இந்த மலையில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இந்த நிலையில் ஐடி ஊழியர்கள், பெண்கள், குழந்தைகளை எப்படி மலையில் ஏற அனுமதித்தார்கள்? டூரிஸ்ட் என்ற பெயரில் வருபவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வனத்துறை அனுமதிப்பதால் தான் இதுமாதிரியான விபத்து நடந்துள்ளது,’’ என்று கூறினார்.

சென்னை டிரைவர் பேட்டி: சென்னையில் இருந்து குழுவினர் வந்த டெம்போ வேன் டிரைவர் சக்திவேல் கூறுகையில், ‘‘சென்னை ஐடி டீமை சேர்ந்த 27 பேரை நேற்று முன்தினம் இரவு குரங்கணியில் இறக்கி விட்டு இங்கேயே தங்கி விட்டேன். கொழுக்குமலை சென்ற அவர்கள் இன்று (நேற்று) மாலை வருவதற்காக காத்திருந்தேன். ஆனால் மதியம் அவர்கள், காட்டுத்தீயில் சிக்கி கொண்டது தெரிந்தது. காயமடைந்தவர்களை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தேன்,’’ என்றார்.

சமூகவிரோதிகள் கைவரிசை?: தேனி மாவட்டம் போடி மற்றும் கேரளாவையொட்டி ெகாழுக்குமலை பகுதி உள்ளதால், கடத்தல்காரர்கள் இந்த மலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மலை செங்குத்தாக உள்ளதால் போலீசார் உள்ளே வரமாட்டார்கள் என்பதால், மலைப்பகுதியில் கடத்தல்காரர்கள், சமூகவிரோதிகள் பதுங்கிக் கொள்கின்றனர். தங்களின் பாதைக்காக மலையில் வளர்ந்துள்ள ஆள் உயர கோரைப்புற்களை அடிக்கடி சமூகவிரோதிகள் தீ வைக்கின்றனர். இதனால் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் கடந்த 20 நாட்களாக இந்த மலையில் பல இடங்களில் தீப்பிடித்து எரிந்து வருகிறது.

கட்சி விழாவில் அமைச்சர்கள் பிசி: ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் 7070 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடத்தினார். இதில் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரவு 10.15 மணிக்குமேல் குரங்கணி காட்டுத்தீ சம்பவ இடத்திற்கு துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றனர். முன்னதாக இவ்விழாவுக்காக, போடி, தேனி, சின்னமனூர் பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. இதனால் காட்டுத்தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தேனி டவுனுக்குள் நீண்ட நேரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தன.  


courtesy;Dinakaran

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval