Tuesday, March 20, 2018

"நான் உடலைக் காட்ட மாட்டேன்; அது பாடி பில்டிங்கில் கட்டாயமுமில்லை!" 'கேரளாவின் பலமான பெண்' விருது வென்ற மஜிஸியா

பலம்லையில் ஹிஜாப் (முஸ்லீம் பெண்கள் தலையைச் சுற்றிப் போடுகிற முக்காடு) போடுவது, முஸ்லிம் பெண்கள் சாதிப்பதற்கு எந்த வகையிலும் தடையாக இல்லை'' என்கிற மஜிஸியா பானுவின் வார்த்தைகளில் ஒரு கோடி நெருப்புத் துண்டங்கள். கேரளாவைச் சார்ந்த பளு தூக்கும் வீராங்கனை மற்றும் பாடி பில்டிங் வீராங்கனையான மஜிஸியா பானுவின் வார்த்தைகளில் ஏன் இத்தனை ரெளத்ரம்? அவரிடமே பேசினோம். 
மஜிஸியா
''ஆடை சுதந்திரம் என்பது பெண்களின் அடிப்படை உரிமை. அது உடம்பை வெளிக்காட்டுகிறபடி அணிகிற உடையாக இருந்தாலும் சரி, உடலை முழுக்க மூடி மறைக்கும் உடையாக இருந்தாலும் சரி. ஆடைகள் பெண் சுதந்திரத்தைத் தடை செய்வதே இல்லை; பெண்களின் திறமைகளையும் அவை மறைத்து வைப்பது இல்லை.  நான் என் மதத்தை மதிப்பவள். அதனால் அதன் அடையாளமான ஹிஜாபையும் மதிக்கிறேன், அணிகிறேன். அது எந்த வகையிலும் என் சாதனைகளுக்குத் தடையாக இல்லை. தட்ஸ் ஆல்'' என ஹாட் மோடிலிருந்து கூல் மோடுக்கு மாறி புன்னகைக்கிறார். 
ஸ்போர்ட்ஸில் எத்தனையோ இருக்க, பவர் லிஃப்டிங், பாடி பில்டிங் மீது ஆர்வம் வந்தது எப்படி? 
''ஒர்கட்டேரி, கேரளாவின் மிகச் சிறிய கிராமம். நகரங்கள், நவீன நாகரிகம் என்னவென்றே அந்தக் கிராமத்துக்குத் தெரியாது. அதுதான் நான் பிறந்த மண். குழந்தைப் பருவத்திலிருந்தே பாக்ஸிங்கில் ஆர்வம் காட்டுவேன். என் அப்பா அப்துல் மற்றும் அம்மா ரஸியா, என்னை ஏதாவது ஒரு பாக்ஸிங் கோச்சிடம் சேர்த்துவிட நிறைய முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கான ஜிம்மே இல்லாத ஊரில், பாக்ஸிங் கோச்சுக்கு எங்கே போவது? வேறு வழியின்றி, என் பள்ளி நாள்களில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதலில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்'' என்கிறார் மஜிஸியா பானு. 
கேரளா
 பல வருட தேடுதலுக்குப்பின், மஜிஸியா, தன்னுடைய   மூன்றாவது வருட பல் மருத்துவப் படிப்பின்போதுதான் பாக்ஸிங் வகுப்பில் சேர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட 15 வருடங்களாக மஜிஸியாவின் மனதுக்குள் கனன்றுகொண்டிருந்த பாக்ஸிங் என்கிற தீப்பொறி, அதன் பிறகு பரபரவெனப் பற்றி எரிந்து பல கோப்பைகளையும் மெடல்களையும் இன்றுவரை ருசி பார்த்துக்கொண்டிருக்கிறது. 
''பாக்ஸிங் கிளாஸில் சேர்ந்த கொஞ்ச காலத்தில் என் கோச், என்னை பவர் லிஃப்ட்டிங்கில் கவனம் செலுத்தச் சொன்னார். பவர் லிஃப்டிங் கோச்சிங்கில் சேர்ந்த இரண்டே வாரத்தில், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கச் சொன்னார். நானும் பங்கேற்றேன். அந்தப் போட்டியில் என்னுடன் கலந்துகொண்ட சக போட்டியாளர்கள் எல்லாம் பல வருடங்களாக பவர் லிஃப்டிங்கில் டிரெய்ன் ஆனவர்கள். ஆனால், என் ரத்தத்தில் ஊறியிருந்த ஸ்போர்ட்ஸ் வெறி, அந்தப் போட்டியில் என்னை ஒரு வெற்றியாளராக மாற்றியது'' என்பவரின் குரலில் டன் கணக்கில் உற்சாகம். 
பெற்றோர்களுடன்
ஆசிய கண்டங்களுக்கான பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மெடல், கொச்சியில் நடந்த கட்டுக்கோப்பான உடலமைப்புகொண்ட பெண்களுக்கான போட்டியில் தங்க மெடல், மூன்று முறை கேரளாவின் பலமான பெண் பட்டம் பெற்றது என ஒட்டுமொத்த கேரளாவையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார் மஜிஸியா பானு. இதில் ஆசிய கண்டங்களுக்கிடையேயான பவர் லிஃப்டிங் போட்டியில் மஜிஸியா தூக்கியது 370 கிலோ எடை. பவர் லிஃப்டிங்கில் பயிற்சி எடுத்த மூன்றே வருடத்தில் இது அசுர சாதனை. 
பலம்
பவர் லிஃப்டிங் செய்துவந்தவர், பாடி பில்டர்களுக்கான மிஸ்டர். கேரளாவின் பெண்களுக்கான சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டது எப்படி? 
''அதற்குக் காரணம், என் ஹஸ்பென்ட் நூர் அகமது அலிசே. பாடி பில்டிங்கில் உடம்பின் பாகங்கள் வெளியே தெரியும்படி உடை அணிய வேண்டும் என்பதால், அந்தப் போட்டியில் நான் கலந்துகொள்ள விரும்பியதே இல்லை. ஃபேஸ்புக்கில் பாடி பில்டிங் போட்டிக்கான விளம்பரங்களைப் பார்க்கவே விரும்பாதவள் நான். ஆனால், எல்லாவற்றையுமே என் கணவரின் ஒரு ஃபேஸ்புக் மெசேஜ் மாற்றிவிட்டது. யெஸ், அவர் ஒருநாள், வெளிநாடுகளில் முஸ்லிம் பெண்கள் முழு உடம்பையும் மூடியபடி, ஹிஜாப் போட்டுக்கொண்டும் பாடி பில்டிங் செய்கிற படங்களை இன்பாக்ஸில் அனுப்பியிருந்தார். அவ்வளவுதான்... எனக்கு உற்சாகம் பிய்த்துக்கொண்டது. உடனே மிஸ்டர். கேரளாவின் பெண்களுக்கான பாடி பில்டிங் போட்டிக்கு அப்ளை செய்து கலந்துகொண்டேன். ஆனால், டைட்டில் வின்னராவேன் என்று சத்தியமாக நினைக்கவில்லை. எல்லாப் புகழும் இறைவனுக்கே'' முகம் மலர்ந்து சிரிக்கிறார் இந்த டிரெண்ட் செட்டர்.
courtesy;vikatan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval