Thursday, July 2, 2015

காற்சட்டைப் பையில் தொலைபேசிகளை வைப்பவரா நீங்கள்..? எச்சரிக்கை!

Untitled-1 copyமனிதர்கள் தங்களின் காற்சட்டைப் பையில் செல் போன்களை வைப்பதால் அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் வீரியம் குறையும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ஆண்களுக்கு காற்சட்டைப் பையில் செல் போன்களை வைப்பதால் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கையிலும், வீரியமான செயற்பாட்டிலும், குறைபாடுகள் ஏற்படுவதாகவும் பிரிட்டனில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செய்திருக்கும் புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் குழு 1492 ஆண்களின் விந்தணுக்களை பத்து வெவ்வேறு ஆய்வுகளின்படி ஆராய்ந்து அதன் முடிவுகளை விரிவாக அலசி ஆராய்ந்தது.
இந்த ஆய்வின் முடிவில், செல் போன்களில் இருந்து உருவாகும் சூடும், மின்காந்த அலைகளும் கதிரியக்கமும் சேர்ந்து மனிதர்களின் விந்தணு உற்பத்தியையும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் செயற்படும் தன்மையையும் ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய மருத்துவர் பியானோ மாத்யூஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த ஆய்வின் முடிவுகள் முழுமையானவை அல்ல என்று மற்ற விந்தணு ஆய்வாளர்கள் இவற்றை புறந்தள்ளி உள்ளனர். ‘இந்த குறிப்பிட்ட ஆண்களின் மற்ற பழக்கவழக்கங்கள், உணவு மற்றும் உட்கொண்ட மருந்துகள் போன்றவற்றை இந்த ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளாத நிலையில் செல் போன்களை காற்சட்டை பையில் வைப்பதனால் மட்டுமே இவர்களின் விந்தணு உற்பத்தியும் விந்தணுக்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக கூறுவதை ஏற்கமுடியாது‘ என்கிறார் ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விந்தணு ஆய்வாளர் மருத்துவர் ஆலன் பேசி.
இந்த ஆய்வின் முடிவுகள் இறுதியானவை அல்ல என்பதை ஏற்றுக்கொள்ளும் பியானோ மாத்யூஸ், செல்போன்களின் சூடும், மின்காந்தப்புலம் மற்றும் கதிரியக்கவீச்சு ஆகியவை விந்தணுக்களில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் குறித்து மேலும் ஆய்வுகள் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்பதை தமது ஆய்வின் முடிவுகளின் குறிப்புகள் உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval