Thursday, May 19, 2016

எகிப்து விமானம் கடலில் விழுந்தது, தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பு

பாரீஸ் நகரில் இருந்து கெய்ரோவுக்கு புறப்பட்டு சென்ற எகிப்து விமானம், கடலில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 66 பேரும் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்க வாய்ப்பு என்று எகிப்து கூறிஉள்ளது.
விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் விழுந்தது என்று கூறப்படும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் யாரும் உயிர் பிழைத்தனரா? என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
விமானத்தின் சிதைவு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று முரண்பாடான தகவல்கள் வெளியாகிஉள்ளது. விமானத்தின் சிதைவு பாகங்கள் கார்பாதோஸ் தீவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சகம்,  எகிப்து விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளது என்று எகிப்துஏர் அறிவித்து உள்ளது. 

தென்கிழக்கு ஏஜியன் கடல்பகுதில் கிரேக்கத்தின் கார்பாதோஸ் தீவில் விமானத்தின் சிதைவு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக முரண்பாடு நீடித்து வருகிறது.
விமானத்தின் சிதைவு பாகங்களை கண்டுபிடிப்பதிலும், விசாரணை நடத்துவதிலும் எகிப்திய விசாரணை குழு கிரேக்க விசாரணை குழுவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. கிரீட்டில் இருந்து சுமார் 425 கிலோ மீட்டர் தொலைவில் கடல்பகுதியில் விமானத்தின் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று கிரேக்கத்தின் இஆர்டி செய்தி வெளியிட்டு உள்ளது. குறிப்பிடப்பட்ட பகுதியானது விமானம் கடைசியாக கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்ததில் இருந்து 100 நாட்டிகல் மைல் தொலைவில் உள்ளது. 

கிரீட்டில் இருந்து சுமார் 370 கிலோ மீட்டர் பரப்பளவில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் பணியில் பிளாஸ்டிக் பொருட்களையும், இரண்டு உயிர்காக்கும் ஜாக்கெட்களையும் கிரேக்கத்தின் போர்க்கப்பல் கண்டுபிடித்து உள்ளது. இருப்பினும் கிரேக்கத்தின் விமான பாதுகாப்பு அதிகாரி கண்பிடிக்கப்பட்ட பொருட்கள் விபத்துக்குள் சிக்கிய விமானத்தின் பகுதி கிடையாது என்று கூறிஉள்ளார்.

தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு

எகிப்து விமான போக்குவரத்து மந்திரி செரீப் பாதி பேசுகையில், விமானம் விபத்து குறித்து ”தீவிரவாத தாக்குதல்” என்பதே மிகவும் சாத்தியமான விளக்கமாக அமையும்,” என்று கூறிஉள்ளார். அவரிடம் விமானம் விபத்துக்குள் சிக்கியதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசிஉள்ள அவர் தொழில் நுட்ப கோளாறைவிட, தீவிரவாத தாக்குதல் என்ற காரணியே மிகவும் வலுப்பெற்று உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். தீவிரவாத தாக்குதல் அல்லது தொழில்நுட்ப கோளாறு சாத்தியங்களை நாங்கள் மறுக்கவில்லை என்றும் செரீப் பேசிஉள்ளார். 

விபத்து நடந்ததாக நம்பப்படுகிற இடத்துக்கு எகிப்து ராணுவத்தின் தேடுதல் பிரிவினரும், மீட்பு படையினரும் விரைந்து, விமானத்தின் சிதைவுகளை தேடி வருகின்றனர். கிரீஸ் நாட்டுடன் இணைந்து எகிப்து ராணுவம் தேடுதல் பணியில் விமானங்களை ஈடுபடுத்தி உள்ளது. கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

விபத்துக்குள்ளான விமானத்தில் 30 பேர் எகிப்து நாட்டினர், 15 பேர் பிரான்ஸ் நாட்டினர், இங்கிலாந்து, பெல்ஜியம், ஈராக், குவைத், சவூதி அரேபியா சாட், போர்ச்சுக்கல், அல்ஜீரியா, கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் பயணம் செய்து உள்ளனர். அதுமட்டுமின்றி 2 கைக்குழந்தைகளும், ஒரு குழந்தையும் பயணித்து உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது.
courtesy'Dailythanthi


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval