Saturday, May 28, 2016

ஓடும் ரயிலில் நீதிபதி தகராறு: திருச்சியில் பரபரப்பு! ( செய்தி + வீடியோ)

திருச்சி: ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வக்கீல்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கின்ற இந்த பரபரப்பான சூழ்நிலையில் திருச்சியில் ஒரு நீதிபதி குடிபோதையில் ஓடும் ரயிலில் அடாவடியாக நடந்து கொண்ட விவகாரம் பற்றி எரிகிறது.
அந்த நீபதியின் பெயர் சுரேஷ் விஸ்வநாதத், காரைக்காலில் உள்ள குடும்ப நலக் கோர்ட்டில் பணி புரிகிறார். இவரது குடும்பத்தினர் நீலகிரியில் வசிக்கிறார்கள். விடுமுறையை முன்னிட்டு வழக்கமாக இவர் காரைக்காலில் இருந்து ரயிலில் கோவைக்கு சென்று அங்கிருந்து நீலகிரிக்கு செல்வார். இப்படித்தான் நேற்று எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் பயணித்தார். தஞ்சாவூருக்கும் திருச்சிக்கும் இடையில் ரயில் சென்று கொண்டு இருந்த போது நீதிபதிக்கும் டிக்கெட் பரிசோதகருக்கும் இடையே  வாய் தகராறு ஏற்பட்டது. சக பயணிகள் முகம் சுளிக்கும் அளவுக்கு கடுமையான வார்த்தைகள் அவர் உபயோகித்தார். இதன் காரணமாக  திருச்சியில் சுமார் ஒருமணி நேரம் ரயில் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் நேற்று(வெள்ளி) இரவு திருச்சியில் டிக்கெட் பரிசோதகர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.     
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு விரைவு ரயில் நேற்று (வெள்ளி) மாலை புறப்பட்டது. அதில் ஏசி பெட்டியில் நீலகிரியைச் சேர்ந்த நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் பயணித்துள்ளார். அப்போது, அவரிடம் டிக்கெட் பரிசோதகர் ஏ. வெங்கடேஷ் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கூறியுள்ளார். இதற்கு நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.  இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ வாட்ஸ் அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இந்தத் தகராறு தொடர்பாகக் கிடைத்த தகவலின் பேரில், ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் திருச்சி ரயில் நிலையத்தில் குவிந்தனர். அப்போது நீதிபதிக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர்  ரயில் திருச்சி வந்து, புறப்படும் வேளையில், அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து ரயில் நிறுத்தப்பட்டது.

டிக்கெட் பரிசோதகரை கடுமையாகப் பேசி, போலீஸ் நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டிய நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் வருத்தம் தெரிவித்தால்தான் ரயிலை இயக்க  அனுமதிப்போம் எனக் கூறி, டிக்கெட் பரிசோதகர் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்து அங்கே வந்த போலீசார், நீதிபதியை மாற்று ஏற்பாடு மூலம் கோவைக்கு அனுப்பி வைத்தனர். இந்த களேபரங்களால் இரவு 8.10 மணிக்கு புறப்படவேண்டிய எர்ணாகுளம் விரைவு ரயில் சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக  புறப்பட்டுச் சென்றது. ரயில் புறப்படுவதில் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, திருச்சி ரயில்வே எஸ்.பி. ஆனி விஜயாவிடம் கேட்டபோது, 'நீதிபதி- டிக்கெட் பரிசோதகர் தகராறு குறித்து டிக்கெட் பரிசோதகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தகராறு செய்தவர் நீதிபதி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் 'புரோட்டகால்' சம்பிரதாயங்கள் உள்ளன. எனவே இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் தகவல் தெரிவித்துள்ளோம். அவரின் கருத்தை அறிந்து பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுப்போம்' என்று கூறினார்.
நீதிபதி- டிக்கெட் பரிசோதகர் தகராறு தொடர்பான வீடியோவை, அவர்கள் இருந்த பெட்டியில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ  எடுத்துள்ளதாகத் தெரிகிறது.மேலும் இது போன்று முக்கிய நபர்கள், அதிகாரிகள் பயணிகள் மத்தியில், டிக்கெட் பரிசோதகர்கள் மீது மிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது  என்று டிக்கெட் பரிசோதகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
courtesy vikadav

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval