Wednesday, October 12, 2016

ஏடிஎம்-ல் கள்ள நோட்டு.. உங்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரியுமா?


யாரோ உங்களிடம் 500 ரூபாய் நோட்டு கொடுத்தால், அது கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகம் நிச்சயம் எழும். உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும், திருப்பிப் பார்த்தும் அது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம். ஆனால், அது கள்ள நோட்டாக இருந்தால்..?

ஏடிஎம் அல்லது வங்கியில் கள்ள ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? யாரிடம் புகார் கொடுக்க வேண்டும் என்பது குறித்து தனியார் வங்கி அதிகாரி விஜயகுமாரிடம் விசாரித்தோம்.

ஏடிஎம்-ல் கள்ள நோட்டு! 

"ஏடிஎம் அல்லது வங்கியில் கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. பொதுவாக அனைத்து வங்கிகளும் ஏடிஎம்-க்கு பணத்தை, அவர்களுடைய கருவூலம் மூலமே அனுப்பி வைப்பர். இந்தக் கருவூலத்தில் அழுக்கடைந்த, கிழிந்த மற்றும் கள்ள நோட்டுகள் அனைத்தும் ஆராயப்படுகின்றன. இந்தக் கருவூலத்திலேயே கள்ள நோட்டுகளை ஆராய்வதற்காகவே சாதனங்களும் உள்ளன. ஏடிஎம்-க்கு அனுப்பப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளும் முழுவதுமாக சோதனை செய்த பின்னர்தான் ஏடிஎம்-க்கு அனுப்பப்படும். ஆகையால் ஏடிஎம்-ல் கள்ள நோட்டுகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு." என்றவர் வங்கி வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கி சொன்னார்.

கள்ள நோட்டுக்குச் சீல்! 

ஏடிஎம்-ல் கள்ள நோட்டுகள் இருந்தால் கீழ்க்கண்ட வழிமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். வாடிக்கையாளர்கள் முதலில் எது கள்ள நோட்டு, எது நல்ல நோட்டு என்பதை நன்கு தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.

ஏடிஎம்-ல் கள்ள நோட்டுகள் கிடைத்தால், எந்த ஏடிஎம்-ல் பணம் எடுக்கப்பட்டதோ, அருகிலுள்ள அந்த வங்கிக்குச் செல்ல வேண்டும். வாடிக்கையாளர் மூலம் கள்ள நோட்டுகள் வங்கிகளுக்கு வந்தால், அந்த பணத்தை முதலில் பரிசோதித்து அது கள்ள நோட்டாக இருக்கும்பட்சத்தில் அந்த பணத்தை 'கள்ள நோட்டு' என்று பணத்தின் மீது  சீல் வைக்கப்படும். அதன்பின் வாடிக்கையாளரின் முகவரி மற்றும் அடையாளச் சான்றை வாங்கி, அவரிடம் கையெழுத்து வாங்கப்படும்.

ஒவ்வொரு வங்கியிலும் கள்ள நோட்டுக்கு என்றே தனி பதிவேடு வங்கி மேலாளரிடம் இருக்கும். அதில் வாடிக்கையாளர் கொண்டு வந்த கள்ள நோட்டு குறித்த விவரம் பதிவு செய்யப்படும். மீண்டும் வாடிக்கையாளருக்கு அந்தக் கள்ள நோட்டு திருப்பி வழங்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக ஏடிஎம்-ல் எடுத்த கள்ள நோட்டுக்கு பதில் வேறு ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும்.

இறுதியாக வங்கியாளர்கள், வாடிக்கையாளர் வழங்கியதில் 3,4 கள்ள நோட்டுகள் இருந்தால், அது குறித்த விவரங்களை போலீஸ் ஸ்டேஷனில் தெரியப்படுத்தி எஃப்ஐஆர் பதிவு செய்வார்கள். அதேசமயம் வாடிக்கையாளர் ஏடிஎம்-ல் கள்ள நோட்டை எடுத்து இருந்தால் அதை வங்கிகளில் நிரூபிக்க வேண்டும். கள்ள நோட்டு தொடர்பாக ஒரு வேளை வங்கி அதிகாரிகள் உங்களுக்கு முறையான பதிலை அளிக்கவில்லை.  கள்ள நோட்டுக்குப் பதில் வேறு பணத்தை வழங்கவில்லை எனில் போலீஸ் ஸ்டேஷனில் அது குறித்து புகார் செய்யலாம்.

ஏடிஎம் ரிஜிஸ்டரில் புகார்! 

இதுவே, வாடிக்கையாளர் இரவு வேளையில் ஏடிஎம்-க்குள் பணம் எடுக்கச் சென்று அதில் கள்ள நோட்டுகள் இருந்தால், அங்குள்ள ஏடிஎம் காவலரிடம் இது குறித்த தகவல்களை தெரிவித்துவிட்டு, சிசிடிவி கேமரா முன் ஏடிஎம் ரிஜிஸ்டரில் உங்களுக்குக் கள்ள நோட்டுகள் கிடைத்துள்ளதாக அந்தப் புத்தகத்தில் புகார் செய்ய வேண்டும். அதன் பின் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்று ஏடிஎம்-ல் கள்ள நோட்டு கிடைத்ததாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொள்வார்கள். விசாரணையில் வங்கி தரப்பில் தவறு இருந்தால், உங்களுடைய பணம் திருப்பி வழங்கப்படும்.

வங்கி கவுன்டர்களில் கள்ள நோட்டுகள் வருவதற்கும், வாடிக்கையாளர்களுக்குக் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர் ரூ.10,000 ஐ கவுன்டரில் செலுத்திவிட்டு, அதில் ஒரு சில நோட்டுகள், கள்ள நோட்டாக இருக்கும்பட்சத்தில், வங்கியாளர் அந்த பணத்தை பரிசோதிக்காமல், அந்தப் பணத்தை மற்ற ஒரு வாடிக்கையாளருக்கு வழங்கும் போது கள்ள நோட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வங்கியில் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி இருந்தால், அதற்கு ஆதாரம் வழங்கினால், அதற்கு உண்டான பணம் திருப்பி வழங்கப்படும்.

ஆர்பிஐ விதிமுறை! 

வங்கிகள் தரப்பில் தவறு என்றால் அந்த பணம் வாடிக்கையாளருக்கு உடனடியாக கிடைக்கும். இல்லையெனில் வாடிக்கையாளருக்குக் கள்ள நோட்டுக்குப் பதில் வேறு பணம் கிடைக்காது. ஆனால், ஏடிஎம் அல்லது வங்கிகளைத் தவிர வேறு ஒரு ஏதாவது இடத்தில் கள்ள நோட்டுகள் கிடைத்தால், அவர் அந்த பணத்தை இழந்ததற்குச் சமானம்.

ஆர்பிஐ விதிமுறைகளின் படி, தெரியாமல் ஒன்றிரண்டு கள்ள நோட்டுகள் வைத்திருப்பது என்பது பெரும் குற்றமில்லை; ஆனால், கள்ள நோட்டை வைத்துக் கொண்டு மற்றவரை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதை விநியோகிக்கக்கூடாது. அப்படி விநியோகித்தால் அது சட்டப்படி தவறு. அந்த வாடிக்கையாளரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்." என்றார்.  

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval