Sunday, October 9, 2016

சாமியாரை நம்பி மகளைப் பறிகொடுத்த ஜெயின் தம்பதி!

துள்ளிக்குதித்து விளையாட வேண்டிய பதின்ம வயதில்,  68 நாட்கள் உண்ணாநோன்பிருந்து, குடும்பத்திற்காக உயிரை விட்டிருக்கிறாள் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி.
13 வயதான ஆராதனா, ஹைதராபாத்தைச் சேர்ந்த லட்சுமிசந்த் சன்சார்டியா என்ற ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவரின் செல்ல மகள். தான் செய்து வந்த ஜூவல்லரி தொழிலில் லட்சுமி சந்த்துக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொழில் நஷ்டத்தில் இருந்து மீண்டு, தனது குடும்பம் மீண்டும் வசதி வாய்ப்புகளை பெறுவது எப்போது? தன் குடும்பம் இழந்த சொத்துகளை மீண்டும் அடைந்து, செல்வ செழிப்புடன் திகழ என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான ஆலோசனையைப் பெற, சென்னையைச் சேர்ந்த சாமியார் ஒருவரை அணுகியுள்ளார் லட்சுமிசந்த். 
வாய்க்கு வந்ததை எல்லாம் பரிகாரமாகச் சொல்லக்கூடிய சாமியாரான அவர், லட்சுமிகாந்தின் குடும்பம் மீண்டும் சுபிட்சம் பெற வேண்டுமானால், 'சதுர்மாஸ்' என்ற தொடர் உண்ணாநோன்பை லட்சுமிசந்தின் பிஞ்சு மகள் ஆராதனா மேற்கொள்ள வேண்டும் என்று உளறி வைத்துள்ளார். சாமியாரின் போலியான ஆலோசனையை அப்படியே ஏற்றுக்கொண்ட லட்சுமிசந்த், தனது மகள் ஆராதனாவை உண்ணாநோன்பிருக்கச் செய்துள்ளார்.சதுர்மாஸ் உண்ணா நோன்பு இருந்தால், தனது குடும்பம் வறுமையில் இருந்து மீண்டு, சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் சிறுமியும் உண்ணாநோன்பைத் தொடங்கி இருந்துள்ளார். 
தெலங்கானா அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி
அக்டோபர் 3-ம் தேதி ஆராதனாவின் 10 வார கால உண்ணாநோன்பு நிறைவடைந்தது. இதனை லட்சுமிசந்தின் குடும்பத்தின் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில், தெலங்கானா மாநில அமைச்சர் பத்ம ராவ் பங்கேற்றது தான் அதிர்ச்சியளிக்கும் செய்தி. லட்சுமி சந்த் குடும்பத்தினரின் இந்த மகிழ்ச்சி அடுத்த சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.
68 நாட்களைக் கடந்து ஆராதனா உண்ணாநோன்பு இருந்ததால், அவரது சிறுகுடல் சுருங்கி, உடலில் நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டது. சிறுகுடல் பாதிப்பைத் தொடர்ந்து, இரண்டு சிறுநீரகங்களும் செயல்படாமல் போயின. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஆராதனா நீண்டநாட்கள் உணவு எடுத்துக்கொள்ளாததால் ஏற்பட்ட, பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.
குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் புகார்
தன் குடும்பத்தின் மேன்மைக்கு என்று போலியாக சாமியார் சொன்னதை ஏற்று, 68 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து உயிரிழந்த சிறுமிக்கு ஆதரவாக, குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் களமிறங்கியுள்ளது. ஆராதனாவின் பெற்றோருக்கு எதிராக, குழந்தைகள் உரிமைகள் சங்கம், போலீசில் புகார் அளித்துள்ளது. சீராட்டிப் பாராட்டி வளர்க்க வேண்டிய மகளை தனது மூடநம்பிக்கையால் பலி கொடுத்து விட்டார் ஆராதனாவின் தந்தை லட்சுமிசந்த்.
தொழிலில் அடைந்த நஷ்டத்தை விடவும், மகளை இழந்த சோகமே அவரது வாழ்நாள் முழுவதும் மேலோங்கி நிற்கும். அவர் எத்தனை கோடி இனி சம்பாதித்தாலும், மகள் ஆராதனா மீண்டும் கிடைப்பாளா?
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval