Monday, December 21, 2015

தகவல் பெறும் உரிமைச்சட்டம். பதில் எவ்வாறு இருக்க வேண்டும் : தமிழக அரசு சுற்றறிக்கை

scroll3
தகவல் பெறும் உரிமைச்சட்டம்…பதில் எவ்வாறு இருக்க வேண்டும்… தமிழக அரசு சுற்றறிக்கை
தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வோருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுவரை இந்தச்சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவோருக்கு என்ன வழிமுறைகளில் பதிலளிக்க வேண்டும் என்று வரையறை செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு இந்த வழிமுறைகளை வெளியிட்டது. தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை இவற்றை விளக்கி அரசின் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், விண்ணப்பித்தவர்களுக்கு அளிக்கப்படும் பதிலில், தகவல் பெறும் விண்ணப்பத்தின் எண், பெறப்பட்ட தேதி, தகவல் தரும் அதிகாரியின் பெயர், பதவி, அலுவலக தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.
ஒருவேளை விண்ணப்பதாரர் கோரிய தகவல்களை தெரிவிக்க இயலாது என்றால் அதற்குரிய காரணங்களை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
வேறொரு தகவல் அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டிருந்தால் அதுகுறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
இறுதியாக தகவல் கோரி முதல்முறையாக விண்ணப்பித்துள்ளாரா அல்லது மேல் முறையீடா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
ஏதேனும் ஆவணங்களை அளித்தால், இது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு, தேதி, அதனை அளிக்கும் அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு அலுவலக முத்திரையுடன் சான்றொப்பம் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval