Friday, December 25, 2015

குமரி அனந்தன் நடைபயணமும் தலைவர்கள் அணிவகுப்பும்: கவனிக்க வைத்த 8 விஷயங்கள்…

236_n
* தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னையில் (வெள்ளிக்கிழமை) தனது நடைபயணத்தை தொடங்கினார். மு.க.ஸ்டாலின், நல்லகண்ணு, வைகோ, ஈவிகேஎஸ் இளங்கோவன், சரத்குமார் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து நடைபயணத்தை தொடங்கிவைத்தனர்.
*அகில இந்திய மதுவிலக்கு பேரவை சார்பில் சென்னையில் தொடங்கிய இந்த நடைபயணத்தில் குமரிஅனந்தனுடன் 30 பேர் கலந்துகொண்டனர்.
* தொடக்கவிழாவில் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ப.சிதம்பரம், தங்கபாலு, கிருஷ்ணசுவாமி, திருநாவுக்கரசர், வசந்தகுமார் மற்றும் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், நல்லகண்ணு மற்றும் பழ.நெடுமாறன், தமிழருவி மணியன், ஞானதேசிகன், சமக தலைவர் சரத்குமார் அகில இந்திய மதுவிலக்கு பேரவை தலைவர் ரஜினீஷ் குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலினுடன், சமக தலைவர் சரத்குமார் கைகுலுக்கி நலம் விசாரித்தார். மதுவிலக்கு விழிப்புணர்வு கொடியை சரத்குமாரையும் சேர்ந்து பிடிக்குமாறு ஸ்டாலின் கூற, இருவரும் ஒன்றாக கொடியை அசைத்து நடைபயணத்தை தொடங்கிவைத்தனர். இதேபோல வைகோவும், ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.
* நடைபயணம் குறித்து குமரி அனந்தன் கூறும்போது, “சென்னையில் தொடங்கி குமரி வரை 800 கிமீ தூரத்தை 50 நாட்களில் சென்றடைய திட்டமிட்டுள்ளோம். வழிநெடுகிலும் மதுவிலக்கு பிரச்சாரம் மேற்கொள்வோம்” என்றார்.
* நடைபயணத்தை தொடங்கிவைத்த பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, “திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளையும் தமிழகத்தில் இருந்து ஓரம் கட்டிவிட்டாலே பூரண மதுவிலக்கு தானாக அமலாகி விடும். அதற்கான முயற்சியில்தான் மக்கள் நலக்கூட்டணி இறங்கியுள்ளது” என்றார்.
* நடைபயணத்தை தொடங்கிவைத்து பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், “மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை பெருகிவிடும் என அதிமுக அரசு நொண்டிச்சாக்கு கூறுகிறது. காவல்துறை அவர்கள் கையில்தானே இருக்கிறது. கள்ளச்சந்தையை ஒடுக்கிவிட முடியாதா? 2016-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் கையெழுத்திடும் முதல் கோப்பு பூரண மதுவிலக்காகத்தான் இருக்கும்” என்றார்.
* முகநூலில் ஸ்டாலின் கூறுகையில், ”மதுவிலக்கு வேண்டும் என்பது, இன்று தமிழகத்தில் மக்கள் இயக்கமாக மாறி விட்டது. 2016 ல் நிச்சயம் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு தாய்மார்கள் கண்ணீர் துடைக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval