Monday, January 8, 2018

மகாத்மா காந்தியை கோட்சேவை தவிர வேறு யாரும் சுட்டதற்கான ஆதாரமில்லை.!

Image may contain: 1 person
மகாத்மா காந்தியை கோட்சேவை தவிர வேறு யாரும் சுட்டதற்கான ஆதாரமில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அமரேந்தர் சரண் கூறி உள்ளார்.
புதுடெல்லி
மகாத்மா காந்தி 30.1.1948 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகிய இருவரும் 15.11.1949 அன்று தூக்கிலிடப்பட்டனர். காந்தி கொல்லப்பட்டு 69 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மும்பையைச் சேர்ந்த ‘அபினவ் பாரத்’ என்ற அமைப்பின் அறங்காவலர் டாக்டர் பங்கஜ் பத்னிஸ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘காந்தி மீது 4 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. கோட்சே சுட்டது 3 குண்டுகள்தான். 4-வது குண்டு எங்கிருந்து வந்தது என்று முறையாக விசாரிக்கவில்லை. அந்த 4-வது குண்டுதான் காந்தி உயிரிழக்க காரணம்.
மேலும் 1966-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி கே.எல்.கபூர் ஆணையம் உண்மையை வெளிக்கொண்டு வரவில்லை. கோட்சே பயன்படுத்திய இத்தாலி பெரட்டா ரக சிறிய துப்பாக்கியை அவருக்கு கங்காதர் தண்டவதே என்பவர் கொடுத்துள்ளார். அவருக்கு ஜெகதீஷ் பிரகாஷ் கோயல் என்பவர் துப்பாக்கியை கொடுத்துள்ளார். இதற்கு மேல் துப்பாக்கி எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்கவில்லை. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியின் பதிவு எண் 606824. இது குவாலியரைச் சேர்ந்த டாக்டர் தத்தாத்ரேயா பர்சுரேவுக்கு சொந்தமானது என்று சந்தேகம் எழுப்பப்பட்டது.
அவரைக் கண்டுபிடித்தபோது அவரிடம் அதே பெரட்டா ரக துப்பாக்கி இருந்தது. அதன் பதிவு எண் 719791. ஆனால், அதே பதிவு எண்ணில் குவாலியரைச் சேர்ந்த உதய் சந்த் என்பவரிடமும் ஒரு துப்பாக்கி இருந்துள்ளது. காந்தியின் உயிரைப் பறிக்க காரணமாக இருந்த அந்த நான்காவது குண்டு, பதிவு எண் 606824 மற்றும் 719791 ஆகிய இரண்டு துப்பாக்கிகளில் இருந்தும் வந்தது அல்ல என்று 48-ம் ஆண்டு வெளிவந்த போலீஸ் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த 4-வது குண்டு எங்கிருந்து வந்தது என்ற மர்மத்தை கண்டறிய மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பதை ஆராய, இந்த வழக்கு விசாரணைக்கு உதவ மூத்த வழக்கறிஞர் அமரேந்தர்சரண் (AmicusCuriae) நியமனம் செய்தனர்.
நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அமரேந்தர் சரண் இது குறித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கை தயார் செய்து உள்ளார். அந்த அறிக்கையை இன்று அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் மகாத்மா காந்தியை கோட்சேவை தவிர வேறு யாரும் சுட்டதற்கான ஆதாரமில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval