Wednesday, January 3, 2018

அமெரிக்காவில் விசா நடைமுறையில் மாற்றம்


Image may contain: 1 personவிசா நடைமுறையில் மாற்றம் அமெரிக்காவில் பணியாற்றும் 7 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்
டிரம்ப் நடவடிக்கையால் விசா நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் 7 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
 #immigration #H1Bvisa
ஜனவரி 03, 2018, 03:30 PM
வாஷிங்டன்,
வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணியாற்ற அனுமதி அளிப்பதற்கு எச்-1 பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி இருந்து பணிபுரியலாம். அவர்கள் பணி சிறப்பாக இருந்தால் மேலும் 3 ஆண்டு காலம் எச்-1 பி விசாவை நீடித்து கொள்ளலாம். இவ்வாறு ஒரு நபர் 6 ஆண்டு காலம் அமெரிக்காவில் தொடர்ந்து பணியாற்ற முடியும்.
அவ்வாறு 6 ஆண்டு பணிபுரிந்த பிறகு அங்கு நிரந்தரமாக தங்கி இருந்து பணியாற்றுவதற்கான கிரீன் கார்டை பெற்று கொள்ளலாம். 6 ஆண்டு பணியாற்றும் நபர் கிரீன் கார்டு பெறுவதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். அவருக்கு கிரீன் கார்டு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தால் அந்த நபர் 6 ஆண்டுக்கு பிறகும் அமெரிக்காவில் தங்கி இருந்து தொடர்ந்து பணி செய்யலாம்.
ஒவ்வொரு நாட்டுக்கும் எத்தனை கிரீன் கார்டு வழங்குவது என்ற நடைமுறைகளை அமெரிக்கா வைத்துள்ளது. அவ்வாறு ஒவ்வொரு நாட்டுக்காரர்களுக்கும் கிரீன் கார்டு வழங்கப்படும். இந்த கார்டை வழங்குவதாக ஒப்புதல் அளித்து விட்டால் அந்த நபர் காத்திருந்து கிரீன் கார்டை பெற்று கொள்ளலாம்.
ஆனால், இப்போது இந்த விசா நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டியிடும் போதே வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் வேலை வழங்குவதை கட்டுப்படுத்த போவதாக அறிவித்திருந்தார்.
அவர் அதிபர் ஆனதும் இதை அமல்படுத்தும் வகையில் படிப்படியாக புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். அதன்படிதான் விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.இப்போது கொண்டு வந்துள்ள மாற்றத்தின்படி எச்-1 பி விசா பெற்ற நபர் 6 ஆண்டுகளுக்கு பிறகு கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து விட்டால் அந்த கார்டு கிடைக்கும் வரை அமெரிக்காவில் தங்கி இருக்க முடியாது.
6 ஆண்டுகள் முடிந்ததுமே அவர் நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். அவருக்கு ஒவ்வொரு நாட்டுக்கும் கிடைக்கும் ஒதுக்கீட்டு முறையில் கிரீன் கார்டு கிடைத்தால் அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு வந்து பணியை தொடரலாம். இவ்வாறு விசா நடைமுறையில் புதிய மாற்றம் கொண்டு வந்திருப்பதால் எச்-1 பி விசா பெற்று இனி 6 ஆண்டு பணிபுரிந்தவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது.
அது மட்டும் அல்ல, எச்1 பி விசா பெற்ற ஆணோ, பெண்ணோ தங்கள் கணவர் அல்லது மனைவியை அமெரிக்காவுக்கு அழைத்து வரலாம். இதற்கு எச்-4 இ.ஏ.டி. என்ற விசா வழங்கப்பட்டது.
இந்த விசா வைத்திருந்தால் அவர்கள் அமெரிக்காவில் பணியாற்றி கொள்ளலாம். இப்படித்தான் இந்தியாவில் இருந்து செல்லும் கணவன்& மனைவி இருவரும் அங்கு பணியாற்றுகிறார்கள். புதிய விசா நடைமுறைப்படி எச்-4 இ.ஏ.டி. விசா வழங்கியதை வாபஸ் பெறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, எச்1 பி. விசா பெற்றவரின் கணவன் அல்லது மனைவி இனி அமெரிக்காவில் பணியாற்ற முடியாது. இந்த நடைமுறைகளால் எச்-1 பி. விசா பெற்று 6 ஆண்டுகள் பணி முடித்தவர்களும், எச்-4 இ.ஏ.டி. விசா வைத்திருப்பவர்களும் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்.
இந்த விசாக்களை பெற்று இந்தியர்கள்தான் அதிக அளவில் அங்கு பணியாற்றி வருகிறார்கள். அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் 85 ஆயிரம் பேருக்கு எச்-1 பி. விசா வழங்கி வருகிறது. இதில். பாதி பேர் இந்தியர்கள்.
இவ்வாறு கடந்த 6 ஆண்டில் மட்டும் 2 லட்சம் பேர் எச்-1 பி. விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்துடன் எச்-1 பி. விசா பெற்று 6 ஆண்டு பணிபுரிந்து கிரீன் கார்டுக்காக பல லட்சம் பேர் காத்து இருக்கிறார்கள். அவர்களும் வெளியேற வேண்டி உள்ளது.
மேலும் எச்-4 இ.ஏ.டி. விசா பெற்ற கணவன் அல்லது மனைவியும் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களும் வெளியேற வேண்டும். இவ்வாறு 5 லட்சத்தில் இருந்து 7 லட்சம் இந்தியர் வரை வெளியேற வேண்டி இருக்கிறது.
அவர்கள் வெளியேறுவதால் அமெரிக்க வேலையை இழக்க வேண்டும். அவர்கள் பணிபுரியும் நிறுவனம் இந்தியாவில் இருந்தால் வேலை வாய்ப்பு வழங்கலாம். இல்லை என்றால் எந்த வேலையும் இல்லாமல் பரிதாபமாக திரும்பும் நிலை உருவாகும்.
இது, இந்திய கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval