Tuesday, October 6, 2015

குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா?

150973706
குளுக்கோஸ், நீர், என்சைம்கள், புரக்டோஸ் ஆகியவை அடங்கியதுதான் தேன். தேனீ மலரில் இருந்து கொண்டு வரும் குளுக்கோஸ் 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவீதமே நீர் இருக்கும். தேனின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அப்பகுதியில் உள்ள தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். வெளிர் மஞ்சள் நிறத்தேன் தரம் வாய்ந்ததாக இருக்கும்.
தேன் கலோரி ஆற்றல் மிகுந்த ஒரு உணவாகும். மருத்துவ குணமுடையது. நீர்ம நிலையில் உள்ள தேன் கெட்டுப்போவது இல்லை. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச்சத்து நுண்ணுயிர்களை வளர விடுவது இல்லை. பதப்படுத்தாத தேனில் 14 முதல் 18 சதவீதம் வரை ஈரத்தன்மை இருக்கும். காயங்களில் தேனை தடவுவதால் அவை விரைவில் குணமடையும். தேனின் தனிப்பட்ட குணங்கள், ரசாயன பண்புகள் அவற்றை நீண்டகாலம் சேமிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது.
ஈரமான காற்று தேனின் மீது படும்போது அதன் நீர்கவர் பண்புகள் ஈரப்பதத்தை இழுத்து தேனை நீர்த்து போகச் செய்து இறுதியில் நொதித்தல் தொடங்கி விடக்கூடும். தேனைப்படிக மாக்கி காலப்போக்கில் அதனை சூடாக்கி கரைத்தும் பயன்படுத்தலாம். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கே தேனை உணவாகக் கொடுக்கவேண்டும். வளர்ச்சியடைந்த குழந்தைகள், பெரியவர்களின் முதிர்ந்த செரிமான அமைப்பு பொதுவாக நுண்ணுயிர்களின் ஸ்போர்களை அழிக்கும் வல்லமை பெற்றிருக்கும்.
கைக்குழந்தைகளுக்கு தேனில் உள்ள இந்த ஸ்போர்கள் பாதிப்பை உண்டாக்கி விடும். அரளிப்பூ, புன்னை மலர்கள், புதராக வளரும் சில செடி இனப்பூக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேன் சிலருக்கு தலைசுற்றல், வியர்வை, குமட்டல், வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.சித்த மருத்துவத்தில் தேன் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீனா,துருக்கி, உக்ரைன் போன்ற நாடுகள் தேன் உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றன.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval