Saturday, February 10, 2018

நேரத்தை மிச்சப்படுத்த வண்டியில் செல்லும் போதே சாப்பிடும் நபரா நீங்கள்?

சாப்பிடும் போதும் சரி தண்ணீர் குடிக்கும் போதும் சரி அவசர அவசரமாக குடிப்பதினால் பாதிப்புகள் அதிகம்.
அவசரமாக  முழுங்காமல் பொறுமையாக சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படும் அதே நேரத்தில் அசைந்து கொண்டிருக்கும் போது அதாவது நாம் எதாவது நடமாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கும் போது சாப்பிட்டால் என்னாகும் என்று என்றாவது நினைத்ததுண்டா?
இன்றைக்கு அவசரமான இந்த இயந்திர உலகத்தில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் பேக் பண்ணி கொண்டு  வண்டில போய்ட்டே சாப்டுறேன் என்று சொல்லி எத்தனை பேர் எடுத்துக் கொள்கிறீர்கள்.
ட்ராஃபிக்கில் நிக்கும் நிமிடத்தில் டக்கென சாப்பிட்டு முடித்து விடுவேன் அதுக்கெல்லாம் தனியா நேரம் ஒதுக்க முடியல என்று எத்தனை பெருமை பேசுகிறார்கள் அவர்கள் எல்லாம் இதனை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
உங்கள் உடல் ஏதேனும் அசைவில் இருக்கும் போது சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனை வருகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் அனுதினமும் பரபரப்பாக ஓட நினைக்காமல் உங்களையும் உங்களின் உடல் ஆரோக்கியத்தையும் பேணிக்காத்திடுங்கள்.
வயிறு உப்புசம் : நீங்கள் சாப்பிடும் உணவு உள்ளே சென்று சரியாக செரிமானம் ஆக வேண்டுமென்றால் அதனை நீங்கள் ரிலாக்ஸாக எடுத்துக் கொண்டால் மட்டுமே முடியும். அவசர அவசரமாக உணவினை எடுத்துக் கொள்வதால், அதுவும் சரியாக கடித்து சாப்பிடாமல் அப்படியே முழுங்குவதால் வயிறு உப்புசம் ஏற்படும். சில நேரங்களில் அளவு தெரியாமல் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதும் உண்டு. இப்படிச் சாப்பிடுவதால் உணவிலிருந்து கிடைக்க கூடிய பெரும்பாலான சத்துக்கள் கிடைக்காது. அதே சமயம் வயிறுக்கு ஓய்வு என்பதே கிடைக்காது. செரிமானத்திற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். காலை உணவு செரிமானம் ஆவதற்குள் மதிய உணவு என அடுத்தடுத்து சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் அபாயமும் உண்டு.
அசிடிட்டி : இந்தப் பிரச்சனை பலருக்கும் உண்டு. உங்கள் உடல் அசைந்து கொண்டே, நடமாட்டத்துடன் இருப்பதால் செரிமானத்திற்கு தேவையான அமிலம் இடம் மாறி வரும். இதனால் அசிடிட்டிப் பிரச்சனை ஏற்படும். இதனால் வயிற்று வலி செரிமாணப்பிரச்சனை ஆகியவை ஏற்படக்கூடும்.
செரிமானம் : நாம் சாப்பிடும் உணவு முறையாக செரிக்கப்பட வேண்டும். அப்போது தான் அதிலிருக்கும் சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும். உணவுப்பாதையில் தடை ஏற்படுவது, நடமாட்டத்தில் இருக்கும் போது சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது என பொறுமையாக எதுவுமே செய்ய முடியாது எல்லாமே அவசர அவசரமாக நடக்கும். இதனால் சரியாக தண்ணீரும் குடிக்க முடியாது நாம் சாப்பிடும் உணவு அப்படியே போய் வயிற்றில் தங்கிடும். இதனால் எளிதில் செரிமானம் ஆகாது.
வாந்தி : சிலருக்கு வாந்தி வரவில்லை என்றாலும் வாந்தி வருவது போன்ற உணர்வு ஒமட்டல் இருந்து கொண்டேயிருக்கும், காலைல சாப்பாடு சாப்டலன்னா கூட பரவாயில்ல ஒரு கிளாஸ் பாலாவது குடிச்சுடு என்று சொல்லி அம்மா நம் கையில் ஒரு கிளாஸ் பாலை திணிப்பதும் அதனை வேண்டா வெறுப்பாக அவசர அவசரமாக பாதியை உள்ளேயும் வெளியுமாய் சிந்தி கிளம்பும் மக்களுக்கு எச்சரிக்கை பதிவு இது. இப்படி குடிப்பதால் உங்களுக்கு ஒமட்டல் ஏற்படும்.
சிறுநீரகப்பிரச்சனை : அசைவில் இருக்கும் போது கேஃபைன் கலந்திருந்த பானங்கள் குடித்து வந்தால் உங்களது சிறுநீர் கழிக்கும் இடைவேளை நேரத்தை குறைக்கும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். சிலருக்கு சிறுநீர் தொற்றும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
வாயுத் தொல்லை : இருப்பதிலேயே பெருந்தொல்லையாய் இருப்பது இது தான். இதனை உள்ளேயே அடக்கி வைப்பதால் பல்வேறு உடல் நலச் சிக்கல்கள் உண்டு. சரி அதனை வெளியிடலாம் என்றால் நம் தன்மானம் அதனை செய்ய விடாது. சாஃப்ட் டிரிங்ஸ் பயணத்தின் போது குடிப்பது இந்தப் பிரச்சனையை அதிகரிக்கும். அதனால் எவ்வளவு நேரமானாலும் என்ன அவசரமானலும் வேகவேகமாகவோ அல்லது அசைவில் இருக்கும் போது சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.
கவனம் : உணவு உண்ணும்போது மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் உண்ண வேண்டும். அப்போதுதான் உணவு நன்றாகச் செரிமானமாகும். மனக் கவலை, மன அழுத்தம், கோபம், எரிச்சல், வெறுப்பு, சண்டை போன்ற உளக் கோளாறுகளுடன் உணவு உண்டால் உணவின் செரிமானம் குறையும். தூக்கமின்மை, ஓய்வின்மை, நாட்பட்ட பயணம் போன்றவற்றாலும் அஜீரணம் ஏற்படும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval