Tuesday, April 19, 2016

காளிக்கு நரபலி கொடுக்கப்பட்டதா பச்சிளங்குழந்தை ? பெரம்பலூர் பகீர்

மூலிகை செடி வளர்க்கும் இடத்தில் குழந்தையை நரபலி கொடுத்துள்ளனர். ஆறு மனித மூளைகளும் பையில் கட்டிவைக்கப்பட்டு காளிக்கு பலிகொடுக்கப்பட்டுள்ளது' என்ற செய்தி பெரம்பலூர் முழுவதும் பரவத் தொடங்கியதும் மாவட்ட முழுவதிலுமே பரபரப்பு தீ பற்றிக்கொண்டது.இது தொடர்பாக இதுவரை ஆறு  நபர்களை கைது செய்துள்ளது காவல்துறை.
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் மூலிகை செடி வளர்க்கும் பண்ணை உள்ளது. இந்த மூலிகை பண்ணையை பெரம்பலூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நடத்திவருகிறார்.
இது மலைகள் நிறைந்த பகுதி. மலைகளின் அடிவாரத்தில் பத்து ஏக்கர் நிலத்தில் மூலிகை செடிகளை வளர்த்துவருகிறார். கடந்த சில காலங்காளாகவே இவரது போக்கில் மாற்றம் தெரிந்தது.
''பில்லி, சூனியம், யார் கையையும்  கட்டிப்போடவேண்டும் என்றால் என்னை வந்து பாருங்கள். ஆண்டவனையே கட்டிப் போடும் திறமை என்னிடம் உள்ளது. வாருங்கள் உங்களுக்கும் கற்றுதருகிறேன்'' என்று இப்பகுதி இளைஞர்களை கார்த்திகேயன், மூளை சலவை செய்து வந்ததாக சொல்கிறார்கள்.
இது தொடர்பாக நம்மிடம்  பேசிய அதே பகுதியைச் சேர்ந்த பூவரசன், '' ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு அந்த ஆள் மீது சந்தேகம் இருந்துச்சி. பலமுறை எங்க பசங்க கிட்ட பில்லி, சூனியம் பத்தி பேசியிருக்கான். இதை எங்க மக்கள் பெருசா எடுத்துக்கல. ரெண்டு மாசமா வெளிமாநிலத்திலிருந்து விலை உயர்ந்த கார்கள் எங்க  கிராமத்துக்கு அடிக்கடி வர ஆரம்பிச்சது. இதுல ஏதோ இருக்குன்னு சந்தேகப்பட்டு, ஊர் மொத்தமா ஒண்ணு கூடி அந்த இடத்துக்குப் போய் பார்த்தோம். அங்க பார்த்த விஷயத்தை எப்படி சொல்றது...?
படுபாவிப்பய..சின்ன குழந்தைகளோட கை, கால்களை வெட்டி ஒரு கிண்ணத்துல அடைச்சு வெச்சிருந்தான். அதோட ஆறு மனுச மூளைகளும் அங்க இருந்துச்சு. அதைப் பார்த்து வெலவெலத்துப் போய், போலீசுக்கு தகவல் கொடுத்தோம். எதுக்காக இந்த பாவத்தை செஞ்சான்னு தெரியல.'' என்றார் பீதி விலகாத குரலில்.
இது தொடர்பாக, கார்த்திகேயன், சித்திக், குலாம்ராசு, ராம்குமார், சலீம், சாதிக் உட்பட ஆறு நபர்களை கைது செய்துள்ளது காவல்துறை. அங்கு நரபலி கொடுக்கப்பட்ட குழந்தை, இந்த பகுதியைச் சேர்ந்ததா இல்லை வேறு பகுதியைச் சேர்ந்ததா என இன்னும்  கண்டறியப்படவில்லை.
இது தொடர்பாக, காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, நடந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துகொண்டிருக்கிறது'' என முடித்துக் கொண்டனர்.
விசாரணை முடிவில் என்னென்ன பூதம் கிளம்பப்போகிறதோ தெரியவில்லை.
-எம்.திலீபன்
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval