Sunday, January 31, 2016

நாளை திருமணம்.... விபத்தில் பலியான புதுப்பெண்... சோகமான கிராமம்

ரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிக் கொண்ட விபத்தில்,  நாளை(ஜனவரி 31ஆம் தேதி ) திருமணம் நடைபெற இருந்த புதுப்பெண் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து- சாவித்திரி தம்பதியின் மகளான சுகந்தி (26) என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு நிச்சயத்தார்த்தம் செய்து இருந்தனர். சுகந்தியின் திருமணம் 31ம் தேதி (நாளை) நடைபெறுவதாக இருந்தது. இதைத்தொடர்ந்து சாவித்திரியின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் திருமண பத்திரிகை கொடுத்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில், ஏழை பெண்களின் திருமணத்துக்காக அரசு வழங்கும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் தங்கம் மற்றும் உதவி தொகை பெற விண்ணப்பிப்பதற்காக,  பொன்பரப்பியில் இருந்து அரியலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும்பொருட்டு,  சாவித்திரி தனது மருமகன் ஸ்டாலின்(35) என்பவரின் இருசக்கர வாகனத்தில் தனது மகள் சுகந்தியுடன் அரியலூர் நோக்கி நேற்று மதியம் சென்றனர். இருசக்கர வாகனத்தை ஸ்டாலின் ஓட்டிச்சென்றார். அரியலூரை அடுத்த தாமரைக்குளம் அண்ணா சிலை அருகே ஸ்டாலினின் இருசக்கர வாகனம் வந்தபோது,  எதிர்புறத்தில் அரியலூரில் இருந்து ஒட்டக்கோயிலிலுள்ள தனியார் சிமெண்ட் ஆலைக்கு சிமெண்ட் ஏற்றுவதற்காக லாரி ஒன்று வேகமாக வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த அந்த லாரி,  இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில், இருசக்கர வாகனத்தோடு 10 மீட்டர் தூரத்திற்கு அந்த லாரி மூன்று பேரையும் இழுத்து தூக்கி வீசிவிட்டு,  அருகிலுள்ள மின்சார கம்பத்தில் மீது  மோதி நின்றது. இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்டாலின்,  அருகிலுள்ள கழிவுநீர் வடிகாலில் படுகாயங்களோடு ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார். இந்த விபத்தில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜனவரி 31ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில்,  புதுப்பெண் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுத காட்சி அனைவரையும் கண் கலங்க செய்தது. மேலும் அரியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விபத்திற்கு காரணமான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர் பகுதியில் அதிகளவில் சிமெண்ட் ஆலைகள் இருப்பதால் லாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் விபத்து எண்ணிக்கையும் அதிகரித்து உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் அரசு பேருந்து மீது சிமெண்ட் லாரி மோதி 14 பேர் பலியாகினர். மேலும் பள்ளி வேன் மீது சிமெண்ட் லாரி மோதி,  பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். இப்படி தொடர்ச்சியாக சிமெண்ட் லாரிகளால் விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது என அந்த பகுதி மக்கள் அரியலூர்-செந்துறை சாலையில் 100க்கும் மேலானோர் போராட்டம் நடத்தினர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் காவல்துறையினர்,  சம்பவ இடத்திற்கு வந்து,  விபத்து குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் விபத்தில் இறந்தவர்களின் சடலங்களை பிரதே பரிசோதனைக்காக காவல்துறையினர் ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு முயன்றனர். அப்போது அதனை ஏற்க மறுத்து,  சிமெண்ட் ஆலை லாரிகளால் பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படுகிறது என்றும், இதற்கு சிமெண்ட் ஆலைகள், விபத்தில் இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறி காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிட்டத்திட்ட 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, போலீசார் இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த போராட்டத்தால் அரியலூர்- செந்துறை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

-எம்.திலீபன்
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval